#கூடல்
#இன்பத்துப்பால்:
#புணர்ச்சி மகிழ்தல்.
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு - இந்தப் பெண்ணில் இருக்கு. இந்தத் திரைப்படப் பாடல் வரியை பலரும் கேட்டிருப்போம். இது ஐயன் வள்ளுவன் சொன்னதை அப்படியே சொன்னது.
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு.
ஐம்புலன்களால் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் இன்பம் என்று வேறொன்றும் இல்லை. இசைத்துப் பாடப்படும் பாடல் போன்று சில ஒன்றிரண்டு புலன்களுக்கு ஒரே நேரத்தில் இன்பமூட்டுபவையாக இருக்கின்றன. ஆனால் எல்லாப் புலன்களுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் ஊட்டும் திறம் இந்தப் பெண்ணில் மட்டுமே உள்ளது என்பதைத் தான் ஒண்டொடி கண்ணே என்று ஏகாரத்தால் சொன்னான் காதலன்.
கண்டு - கண்ணால் கண்டு
கேட்டு - காதால் கேட்டு
உண்டு - நாவால் உண்டு
உயிர்த்து - மூக்கால் நுகர்ந்து
உற்று - உடலால் தீண்டி
அறியும் ஐம்புலனும் - அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும்
ஒண்டொடி - ஒண் + தொடி - ஒளி பொருந்திய வளையல்; இங்கே அந்த வளையலை அணிந்தப் பெண்ணைச் சுட்டியது
ஒண்டொடி கண்ணே உள - பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றன.

0 Comments
YOUR COMMENT THANKYOU